இந்த நாடு மிகப் பெரிய இனக்கலவரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது - ஸ்ரீதரன்!

கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கத்தோடு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொழும்பில் இரண்டு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. ஒன்று கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. உதய கம்மன்பில அவர் அங்கு இருக்கக் கூடாது எனக் கூறி போராட்டம் நடத்துகிறார். ஆனால் உதய கம்மன்பில பிறப்பதற்கு முன்பதாகவே அந்த காணி அங்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அமைச்சர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் நாளை அங்கிருக்கும் தமிழர்களுக்கும் இதே நிலை ஏற்படும். இதைதான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்தார். 2008,09 களில் அங்கிருந்த தமிழ் மக்களை இரவோடு இரவாக வெளியேற்றினார். பின்னர் வழக்கு தாக்கல் செய்துதான் தமிழர்கள் மீண்டும் கொழும்பில் குடியேறினர். அத்தகைய வரலாறு இருக்கிறது.
அதேபோல் EPF, ETF சம்பந்தமான சர்ச்சையும் நீடித்து வருகிறது. இதில் அதிகளவு பாதிக்கப்படபோவது மலையக மக்கள்தான். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 600 ரூபாய் தான். அதில் ஈ.பி.எஃப், ஈ.டி.எஃப் கழிக்கப்பட்டு சிறிய வட்டி போட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதையும் தற்போது அரசாங்கம் கொள்ளையடிக்கவுள்ளது. இறுதியில் EPF, ETF இல்லாமல் மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை வரும். ஆகவே ஏராளமான மக்களின் மரணத்திற்கு அரசாங்கம் வழிதேடி வருகிறது.
இப்படி சாதாரண மக்களின் ஊதியத்தை கொள்ளையடிக்கும் அரசாங்கம் மக்களுக்கான தேவைகளை செய்து தருமா? ஐ.எம்.எஃபின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடனை மறுசீரமைக்கின்றோம் என சொல்லிக்கொண்டு மக்களுடைய பணத்தினையே கொள்ளையடிக்கிறது.
இப்படி சென்றால் கோட்டாபய ராஜபக்ஷவின் நிலை வெகு சீக்கிரத்தில் ரணிலுக்கும் வரும். நாடு தற்போது பெரும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. தற்போது கடும் நெருக்கடிக்கு மத்தியிலேயே எங்களுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கமோ, புத்தர் சிலைகளை வைப்பதிலும், காணியை அபகரிப்பதிலும், தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகிறது. பளை பகுதியில் 180 ஏக்கர் காணியை புத்தளத்தை சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணி இல்லை. யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காணி இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவர்களுடைய நோக்கம் மீண்டும் ஒரு இனக்கலவரம் வரவேண்டும் என்ற வகையிலேயே இருக்கிறது. ஆகவே இந்த நாடு மிகப் பெரிய இனக்கலவரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.



