கிளிநொச்சியில் அலுவலக நேரத்தில் படம் பார்க்க சென்ற அதிகாரிகள்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் இன்று (07.08) நண்பகலுக்கு பின்னர் தூவானம் என்ற திரைப்படத்தை பார்க்க சென்ற நிலையில், மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.
இன்று (திங்கட்கிழமை) அலுவலக நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெருமளவான மக்கள், சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இருப்பினும் அங்கு பணிப்புரியும், துறைசார் அதிகாரிகள் அலுவலக நேரத்தில் படம் பார்க்க வெளியே சென்றுள்ளனர். இது மிகவும் வேதனையான விடயம் என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மக்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான துறைகளில் ஈடுபடும் செயலக அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.