மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது!
எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ள அமைச்சர் அலி சப்ரி, தற்போது பொலிஸார் அரசியல் மயமாகியுள்ளதாகவும், இதன்காரணமாக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
13ஆவது சட்டத்திருத்தம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள். அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள்.
பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும். தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது.
இதன்போதே பொலிஸ் கட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஒன்பது மாகாணங்களும் பொலிஸ் அதிகாரத்தை கையாளும்போது நாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ஏற்படுகின்றது.
ஆகவே பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்தே இறுதி தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.