இலங்கை புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்ற திட்டம்!
இலங்கை புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றும் பிரேரணை தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த யோசனையை நேற்று (24.07) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு புகையிரத சேவைகள் மற்றும் இலங்கை புகையிரத சேவைகளை மையப்படுத்தி உரிய அறிக்கையை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புகையிரத ஊழியர்கள் நேற்று முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகையிரத சேவை தொடர்பில் கடும் தீர்மானம் எடுத்து அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
பயணிகளை கொழும்பிற்கு அழைத்து வந்து ரயிலை நிறுத்தினால், வேலைக்குச் செல்ல விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களைத் தவிக்கவிட்டு, ஒரு வலுவான முடிவு எடுக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்த்தன காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.