இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காற்றானது 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இடி, மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என எதிர்வுக்கூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.