மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் குமுதினி படகு!
யாழ். தீவுகளுக்கிடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் குமுதினி படகு மீள் புனரமைப்பு செய்யப்பட்ட பின்னர் படகின் சமநிலை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன் என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.
70 இலட்சம் ரூபா செலவில் குமுதினி பயணிகள் படகை போக்குவரத்திற்கு தயார்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் மீண்டும் குமுதினி பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்களாக படகு பழுதடைந்த நிலையில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் யாழ்.தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
குமுதினி படகு சேவையில் ஒரே தடவையில் 85 பயணிகளையும் 4000 கிலோ சரக்குகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இந்த சோதனைப் பயணம் வெல்வெட்டித்துறை கடல் எல்லையில் ஆரம்பமாகி இரண்டு மணி நேரமாக முன்னெடுக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.
யாழ்ப்பாணம் குறிகட்டுவான மற்றும் நெடுந்தீவு தீவுகளுக்கு இடையிலான இந்த குமுதினி பயணிகள் படகுச் சேவை மிகவும் பிரபலமான சேவைகளில் ஒன்றாகும்.