இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பாக கலந்துரையாடவில்லை - IMF
இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கூட்டாண்மை வரிவிதிப்புக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை என உலகளாவிய கடன் வழங்குனரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான சில சமீபத்திய ஊடக அறிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் IMF வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன், வரும் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் வரவிருக்கும் முதல் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, உலகளாவிய கடன் வழங்குபவர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது டிஜிட்டல் வரி சேவையை அறவிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த நலன் கருதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.