கபத்தை நீக்கும் கற்பூரவல்லி!

#India #Health #children #Healthy #World_Health_Organization #2023
Mani
9 months ago
கபத்தை நீக்கும் கற்பூரவல்லி!

கற்பூரவல்லி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடி. பெரிய பராமரிப்பு இன்றி எளிதில் வளரக்கூடிய இச்செடியில் பல மருத்துவ பலன்கள் உள்ளன.

மனதுக்கு உற்சாகமளிக்கும் பிரத்யேக வாசனை கொண்டது கற்பூரவல்லி மூலிகை. சிறிய தொட்டி போதும். கற்பூரவல்லி வளர்க்க கிள்ளக் கிள்ள இலைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.

நுரையீரல் பாதை தொடர்பான நோய்களையும், காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மையும் கொண்டது. இதிலுள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் தன்மை இருப்பதால் பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

கற்பூரவல்லி இலைச்சாற்றை சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்க குணமாகும்.

கற்பூரவல்லி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெயோடு சேர்த்து காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.

இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும், மாலையிலும் கற்பூரவல்லித் தேநீராகப் பருக தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும்போதே சிறிதளவு இலையை மென்று சாப்பிட தொண்டையில் கட்டிய கபம் இளகும்.

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் களேபரங்களைத் தடுக்க, கற்பூரவல்லிச் சாற்றை நீரில் கலந்து பருகலாம்.

தண்ணீரில் கற்பூரவல்லி இலைகளை சிதைத்துப் போட்டு ஆவி பிடிக்கலாம்.