மன அழுத்தத்தால் சீனாவில் அதிகரிக்கும் தற்கொலைகள்

உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருக்கும் கடுமையான கல்வி முறையால் 35 வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீன மாணவ-மாணவியர் எதிர்கொள்ளும் கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் நடத்திய ஒரு ஆய்வில், 2010 முதல் 2021 வரை 5-வயது முதல் 14-வயது வரையிலான குழந்தைகளின் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10% அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இதே போல், 15-வயது முதல் 24-வயது வரையிலான தனிநபர்களிடையே தற்கொலை விகிதம் 2017 வரை 7% சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% உயர்வை எட்டியுள்ளது.
சீனாவில் வாழ்வில் ஒரு உயர்வான அந்தஸ்து பெற, கல்வியில் பெரும் வெற்றியடைய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில் நாட்டம் பெறுவதால் அவர்கள் மன நலனை பெரிதும் இது பாதித்துள்ளது.
இதை களைய உடனடி கவனம் மற்றும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.



