பாம்பன் வடக்கு கடல் திடீரென உள்வாங்கியது: கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் சேதம்

#India #weather #Rain #Lanka4
Kanimoli
1 year ago
பாம்பன் வடக்கு கடல் திடீரென உள்வாங்கியது: கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் சேதம்

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வரும் நிலையில் பாம்பன் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் திடீரென சுமார் 200 மீட்டர் உள் வாங்கியுள்ளதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதமடைந்துள்ளது.

 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், வடக்கு லைட் ஹவுஸ் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின. இதனால் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். 

 கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் மீன்பிடி படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை மீனவர்கள் காத்திருந்து மீனவர்கள் படகுகளை மீட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீன் பிடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பாம்பன் வடக்கு மீன் பிடி துறைமுக பகுதியில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுக அமைத்து தந்தால் கடல் உள் வாங்கும் நேரங்களில் மீன் பிடி தொழில் பாதிக்காமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் படிக்க கடலுக்குச் செல்லலாம் என அப்பகுதி நாட்டு படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்