வெலே சுதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பளை வித்தனாலவின் சமந்தகுமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் உறவினர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஆகஸ்ட் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்தே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக அடுத்த நீதிமன்ற தினத்தன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அரச தரப்பு சாட்சிகள் 6 பேருக்கு அழைப்பாணை அனுப்பவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் சுமார் 15 கோடி காணி மற்றும் வீடுகளை கையகப்படுத்தி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இழைத்ததாக குற்றஞ்சாட்டி வெலேசுதா மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.