ஒரே நாளில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தினை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவன் பல்கலைக்கழக அக்பர் விடுதியின் மூன்றாவது மாடி அறையொன்றில் உள்ள குளியலறையிலிருந்து நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
22 வயதுடைய நற்குணராசா குகதீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த மாணவருடன் மேலும் மூன்று மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பல்கலைக்கழக மாணவன், யாழ். வடமராட்சி அல்வாய் மாலிசந்தி பகுதியை சேர்ந்தவராவார்.
வரணி மத்திய கல்லூரியின் மிகவும் திறமையான பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி, பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கடந்த ஆண்டு உள்நுழைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பேராதனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் யாழ் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
