மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணச்சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
கிறிஸ்தவ மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணச்சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி - தாக்கல் செய்த ரிட்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இதனை நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த ரிட்மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, இந்த பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து, உரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.