சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
குழந்தைகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட உடல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்காக தற்போதுள்ள குற்றவியல் சட்டத்தில் உள்ள சட்டங்களைத் திருத்துவது தொடர்பான வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வரைவை மீளாய்வு செய்து இம்மாத இறுதிக்குள் நீதியமைச்சர் ஊடாக அமைச்சரவைக்கு சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் உயத குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
சில ஆசிரியர்கள், முதியவர்கள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகங்களை துரிதமாக ஒடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட முறைமையின் அவசியத்தை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
செயல்கள். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் உயரமான மாடியில் இருந்து தவறி விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை துணை வகுப்பு ஆசிரியை ஒருவரால் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை போன்ற தொடர் சம்பவங்கள் தொடர்பிலான அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
நாட்டின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தனியான சட்டத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கையடக்கத் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை பாவித்து சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவோர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவித்துள்ளார்.
இதன்படி, உரிய சட்டங்கள் வரையப்பட்டதன் பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.