சூடானில் வலுக்கும் இராணுவத்திற்கு எதிரான கலவரம்: இதுவரை 185 பேர் உயிரிழப்பு

இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் RSF என்ற துணை இராணுவப் படை ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் (Khartoum) உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை இராணுவப் படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உட்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
சூடான் இராணுவத் தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை இராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த கலவரத்திற்கு காரணம் எனவும் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற இந்த மோதலை முடிவிற்குக் கொண்டுவர உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் கூட இந்த மோதல் இன்னும் அதிக நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.



