ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய நிவாரணம் வழங்கிய இலங்கை தேர்தல் ஆணையம்: இந்திய செய்தித்தளம் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கை தேர்தல் ஆணையம் பாரிய நிவாரணம் வழங்கியுள்ளதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.
உள்ளூராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்த அவர் மறுத்துள்ள நிலையில், திட்டமிட்ட திகதியில்; தேர்தலை நடத்தும் நிலையில் தாம் இல்லை என்று இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த திங்களன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த விடயம் தொடர்பிலேயே இந்திய செய்தித்தளம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
இது,சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விக்கிரமசிங்கவுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது என்றும் அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் விக்ரமசிங்கவின் கட்சி படுதோல்வி அடையும் என்பது பொதுவான கருத்தாகும்.
அத்தகைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனாதிபதியின் நம்பகத்தன்மையில் ஆழமான ஓட்டை ஏற்பட்டிருக்கும்.
அத்துடன், நாட்டில் பொதுமக்களின் கோபத்திற்கு மத்தியில் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமுல்படுத்துவது விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு இன்னும் கடினமாக இருக்கும் என்றும் செய்தித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனிஆள் வருமான வரி விகிதத்தை 36 சதவீதமாக உயர்த்தியது. இது தவிர, வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நகர்வுகளுக்குப் பிறகு விக்கிரமசிங்கவின் புகழ் மேலும் சரிந்துள்ளது.
இந்தநிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தேர்தல் கூட்டை அமைந்துள்ள விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பதை அரசியல் நிபுணர்களை இந்திய செய்தித்தளம் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளது.



