தேர்தல் 2024 வரை தாமதமாகும்.. பிரச்சார பணிகளை நிறுத்துங்கள்: ஐ.தே.கவுக்கு ஜனாதிபதி தகவல்..

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடியாது என திறைசேரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2024 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்தன தெரிவித்துள்ளார்.
காலி மகாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிதியமைச்சர் பதவியை வகிக்கும் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து ஐ.தே.க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் திறைசேரிக்கு தற்போது இல்லை. இதனால் இடைத்தேர்தல் 2024 வரை ஒத்திவைக்கப்படும்.
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% குறைத்து 2024 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்தன தெரிவித்தார்.
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் காலி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர்களுக்கான பிரசாரங்களை நிறுத்துவது நல்லது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்தன வேட்பாளர்களிடம் தெரிவித்தார்.



