யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைவீழ்ச்சி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் மழை நாளை மறுதினம் வரை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலையின் சீனன் குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் காற்று 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவதாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம் எனவும், மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.



