சிறுநீரக கடத்தலின் பிரதான தரகர் உட்பட மூவர் கைது

பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடியின் பிரதான தரகராக செயற்பட்ட கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) பிற்பகல் அமர்வீதிய லாண்டிரியாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல், இருவருக்கு போலி சான்றிதழ் வழங்கி சிறுநீரக கடத்தல்காரர்களுக்கு உதவியதாக கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம சேவைக் களங்களின் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 59 வயதுடையவர்கள் எனவும், ராஜகிரிய மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.



