ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் என நீதி மன்றம் அறிவித்துள்ளது.
தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, வழக்கின் 14வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள திரு.இப்றாஹிம் மௌலவியை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாத நிலையில், குறித்த சந்தேகநபர் சுகயீனமடைந்து கண்டி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர். .
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்து நாளை அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் 13வது பிரதிவாதி மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதா என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வினவினார்.
இதன்படி, குறித்த பிரதிவாதி விசாரணையை எதிர்கொள்ள பொருத்தமான மனநிலையில் உள்ளாரா என்பதை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் நோட்டீசில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அவருக்கு அறிவித்துள்ளது.



