பெறுமதியான சொத்துக்களை விற்று மிக குறைவாக உண்ணும் இலங்கை மக்கள்: உலக உணவுதிட்டம் அதிர்ச்சி ரிப்போட்

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிகமோசமான நாணய வீழ்ச்சி காரணமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையர்கள் வாழ்க்கை நல்லவிதத்தில் காணப்பட்ட காலத்தில் சேர்த்த சொத்துக்களை விற்று மிக குறைவாக உணவுண்கின்றனர் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
ஓக்டோபர் மாதம் குடும்பங்களின் உணவு பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டன என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
பத்தில் ஏழு குடும்பங்கள் மிகவும் குறைவாக விரும்பப்படும் உணவை உண்ணுதல்போன்ற உணவு தொடர்பான மூலோபாயங்களை பின்பற்றுகின்றன ஜூன் மாதம் முதல் இந்த போக்கை அவதானிக்க முடிகின்றது என டிசம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பத்தில் எட்டு குடும்பங்கள் பெறுமதியான சொத்துக்களை விற்பது போன்ற வாழ்வாதாரத்தை சமாளிப்பதற்கான மூலோபாயங்களில் ஈடுபடுகின்றன ஜூன் மாதத்திற்கு பின்னர் இதுவே அதிகம் எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நெருக்கடி ஆரம்பமான பின்னர் 1.1 மில்லியன் நிவாரணத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள உலக உணவு திட்டம் அளித்த அரிசியில் 5,56,229 பாடசாலை மாணவர்கள் மதிய உணவை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.



