இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை!

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அரிசி வியாபாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி உள்ளதாகவும் அவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 50 இலட்சத்து 34,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வருட இறுதி வரை அரிசி இறக்குமதியை தொடர்ந்தால் அரிசியின் அளவு 50 இலட்சத்து 50,000 மெற்றிக் தொன்னை தாண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



