இன்றைய வேத வசனம் 26.08.2022: செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு சினேகிதரைச் சம்பாதியுங்கள்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 26.08.2022: செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு சினேகிதரைச் சம்பாதியுங்கள்

குளிரில் பட்டினியோடு இருக்கும் ஒருவனிடம் "இயேசு நல்லவர், அவர் உன்னை நேசிக்கிறார்" என்று சொல்வதில் பிரயோஜனம் என்ன! அவனுக்கு வேண்டியது ஒரு போர்வையும், இரண்டு இட்லியும் தான்.

நாம் "இயேசு" என்று சொல்வதற்கு முன் அவனுக்கு அத்தியாவசியமானதைக் கொடுத்துவிட்டு, பின்னர் இயேசுவை குறித்து சொன்னால் அவனுக்கு மட்டுமல்ல பிரயோஜனம், நமக்கும் தான் ஆத்துமாவை எளிதாக ஆதாயம் பண்ணலாமே!

ஆண்டவரின் அன்பை அறிவிக்க வந்த ஒவ்வொருவரும் அதைத்தான் செய்தார்கள். வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல், கிணறு வெட்டுதல், கல்வி, மருத்துவம் என அனைத்து சேவைகளையும் செய்தார்கள். அதனால் அநேகரை ஆண்டவரிடம் கொண்டு வந்தார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் சுவிசேஷம் சொன்ன நாட்களில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்களை விட இப்போது ஏற்றுக்கொள்பவர்கள் குறைவுதான்.

காரணம் வசதி, அந்தஸ்து எல்லாவற்றையும் ஆண்டவருக்காக தரைமட்டமாக்கி இயேசுவை மட்டுமே உயர்த்திப் பிடித்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.

பவுல் அதனால் தான் சொல்லுகிறார், எல்லாவற்றையும் கிறிஸ்து இயேசுவிற்காக நஷ்டமும், குப்பையுமாய் எண்ணுகிறேன். என்று.

"தரித்திரருக்கு சுவிசேஷம்" என்பது மிஷனரிகள் செய்ததை போல் செய்வதுதான்.

படிப்பில்லாத பாமர மக்களுக்கு கல்வி கண்ணைத் திறந்து, மருத்துவமனைகளை உருவாக்கி, தொழில்கள் பலவற்றை சொல்லிக் கொடுத்து, இப்படி எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்து, ஆண்டவரின் அன்பு தங்களை நெருக்கி ஏவுவதை தெரிவித்தார்கள்.

அந்த அன்பினால் தொடப்பட்டவர்கள் கூட்டம், கூட்டமாய் ஆண்டவரிடம் வந்தார்கள்.

தங்களுடையதை இழந்து தங்களை வெறுமையாக்கி ஆண்டவரைப் பற்றி கூறிய மேல்நாட்டு மிஷனரிகளின் மூலமே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

தங்களுக்கு, தங்களுக்கு என்று சேர்ப்பு அவர்களால் சுவிசேஷம் பரவ முடியாது.

ஒரு ஏமிகார்மைக்கேல், ஐடாஸ்கடர், அன்னை தெரசா ஏன் உருவாகவில்லை? பணத்தில் புரளும் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ போதகர்களுக்கு அந்த எண்ணம் இன்று உதிப்பதேயில்லை.

சுவிசேஷம் சொல்வதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தேவையானது திறந்தவெளி கூட்டமல்ல, சேவை மனதுடன் கூடிய நற்செய்தியே!

திருச்சபைகள் மட்டுமல்ல குழுக்களாகவும் குடும்பமாகவும் ஏன் தனியாகவும் இவ்வாறு செய்யலாமே!

கர்த்தர் தாமே நம் தாலந்துகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் நற்செய்தி பரவ கிருபை செய்வாராக! 
செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு சினேகிதரைச் சம்பாதியுங்கள் லூக்கா 16:9
ஆமென்!