இன்றைய வேத வசனம் 23.08.2022: யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 23.08.2022: யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்

ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் - 2 நாளாகமம் 24:2

ஷிபுமோனும் எலிசபெத்தும் கேரள மாகாணத்தின் பசுமையான ஊரிலிருந்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து, பாம்பு பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதிக்கு அவ்வளவு யாரும் சென்றதில்லை. ஆனாலும் அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலைத் தொடரக்கூடாது என்பதற்காக இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

 யோய்தா என்னும் பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று. ஆனால் அதற்கு தேவனுக்கான வாழ்நாள் அர்ப்பணம் என்று அர்த்தம். நேர்த்தியாக ஆட்சி செய்த யோவாஸ் ராஜாவின் நாட்களில் இவன் ஆசாரிய ஊழியம் செய்தான் – யோய்தாவிற்காய் நன்றி.

யோவாஸ் ஏழு வயதாயிருக்கும்போது, அவரை ராஜாவின் ஸ்தானத்திற்கு அபிஷேகம் பண்ணியது ஆசாரியனாகிய இந்த யோய்தா (2 இராஜ. 11:1-16). ஆனால் இது அதிகார பறிப்பு இல்லை.

யோவாஸின் முடிசூட்டு நிகழ்வில் யோய்தா, “அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கை பண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும்” செய்தான் (வச. 17). அவன் தேசத்தின் மீது சீர்திருத்தத்தை ஏற்படுத்தினான்.

“யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்” (2 நாளாகமம் 24:14). அவனுடைய அர்ப்பணிப்பிநிமித்தம், “அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்” (வச. 16).

தேவனை மையமாய் வைக்கும் இந்த வாழ்க்கை முறையை, “ஒரே பாதையில் நிலையான கீழ்ப்படிதல்” என யூஜின் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். புகழ், பதவி மற்றும் சுயநலத்தினால் கறைபடிந்திருக்கிற உலகத்தில் இவ்வகையான கீழ்ப்படிதல் அவசியப்படுகிறது.