இன்றைய வேத வசனம் 09.07.2022: தேவனும் வேதமும் உங்களை ஜெயிக்கட்டும்! பிசாசும் தந்திரங்களும் உங்களில் தோற்கட்டும்.

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 09.07.2022: தேவனும் வேதமும் உங்களை ஜெயிக்கட்டும்! பிசாசும் தந்திரங்களும் உங்களில் தோற்கட்டும்.

இளைஞர் பலரும் திருமணத்திற்கு முன்பே வாழ்வை அனுபவிக்கின்றனர். பின்பு தாழ்வு அவர்களை அனுபவிக்கிறது.

விருந்திற்கு பின்புதானே இரசம் இனிக்கும். அது போல தான் திருமணத்திற்கு முன் உறவு பாவம்.
பெரும் பாதகம் என்றும் சொல்லலாம். அது எவரோடு இருந்தாலும் வேதத்திற்கு புறம்பானது கட்டளைகளுக்கு எதிரானது கண்டனதிற்குரியது.

திருமணத்திற்கு பிறகு துணை மாறுதல் துரோகம், அருவருப்பு அது தரும் சன்மானம் அவமானம், அமைதியின்மை, அலங்கோலம் பின் மரணம் நரகம்.

இதுதான் யார் பார்க்கிறார்கள் அனுபவித்து விடு என்று உங்கள் உள்மனம் சொன்னால், நீங்கள் மாற்றுப் பாதைக்கு மாறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

முடிவில் அப்பா என்று அழைக்கமாட்டீர்கள் ஐயோ என்றலறுவீர்கள்.
மாற்றுப்பாதையின் மனிதர்கள் எல்லா இடத்திலும் பரவி விட்டார்கள். ஊழியங்களிலும், சபைகளிலும் கூட வலுசர்ப்பங்களை போல அவர்கள் பதுங்கி இருக்கிறார்கள்.

பழகுவதற்கு இனிமையாய் உதவிகள் செய்வதில் தீவிரமாய் ஆடுத்தோலில் ஓநாய்களாய் அலைவார்கள்.
இரை தேட வெறிகொண்டலையும் ஓநாய்களின் பற்களுக்குத் தப்பவேண்டுமெனில் ஆவியைப் பகுத்தறிதலும், வசன அறிவும், பரிசுத்த வாழ்வுக்கான வெறியும், சுவிஷேச தாகமும் வேண்டும்.

புதிய பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, விடுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் மாணவக் கண்மணிகளே கவனமாய் இருங்கள். நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மட்டுமல்ல தேவாதி தேவனுக்கும் கண்மணிகள்.
நீங்கள் தவறு செய்தால் எல்லோருக்கும் உறுத்தும் நீங்கள் கண்மணிகளல்லவா?

புதிய இடங்களில், புதிய தொடர்புகளில் அதிக ஜாக்கிரதை தேவை. பிசாசின் முதல் ஆயுதம் தொடர்புகளே.

நல்ல தொடுதல், தீய தொடுதல் நம் பெண் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அல்லது கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நல்ல பார்வை, தீய பார்வை வித்தியாசம் தெரிய வேண்டும்!

ஓர் அறையில் இருபாலினர் இசைந்து வாழும் ஒழுக்கக்கேட்டிருக்கும் நீங்கள் தப்ப வேண்டும். இரு சக்கர வாகனத்தில் மறுப்பாலர் பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.

போதைக்கான புதிய முயற்சிகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட வேண்டும். வேதமும் வாழ்ந்துவென்ற பரிசுத்தவான்களும் கற்று தராத நூதன ஆராதனைகளுக்கு, ஆவி வணக்கங்களுக்கு, புரட்டு உபதேசங்களுக்கு விலகியே ஆக வேண்டும்.

ஏனென்றால் இவை அனைத்தும் நேர்த்தியானவைகளிலிருந்து உங்களை விலக்கி உங்கள் பொன்னான காலத்தை மண்ணாகிவிடும்.

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானே அதற்கு அவன் அடிமைப்பட்டுயிருக்கிறானே என வேதம் கூறுகிறது.

தேவனும் வேதமும் உங்களை ஜெயிக்கட்டும்! பிசாசும் தந்திரங்களும் உங்களில் தோற்கட்டும்.
#வெளிப்படுத்தல் 3:21

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.