இன்றைய வேத வசனம் 26.07.2022: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 26.07.2022: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உங்களில் பெருகுவதாக.

வெகு வேகமாகவே நாட்கள் ஓடுகின்றன. நம்முடன் வாழ்ந்த அனேகர் நம்மை விட்டு கடந்து சென்றுவிட்டனர்! நாம் நிர்மூலமாகாதிருப்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையே;
அவருடைய இரக்கங்களுக்கு முடியவில்லை. முடிவில்லா இரக்கத்தால் நம்மையும் நம்மை நம்பித் தந்த ஊழியங்களையுங்களையும் அவரே முன் நடத்துகிறார். தேவ பணியில் ஈடுபடும் அனைவரையும் ஆசீர்வதித்து நடத்துகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

இயேசு தன் ஊழியத்தின் ஆரம்ப நாட்களிலே ஒரு நாள் கெனேசரேத்துக் கடலருகே நின்ற போது, திரளான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி வந்தனர்.

மீன் பிடிக்கிறவர்கள் படகுகளை விட்டறங்கிய பின், அங்கு நின்ற படகு ஒன்றில் ஏறி, இயேசு ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.

அவர் போதகம் பண்ணி முடித்த பின் படகின் உரிமையாளராகிய சீமோனை நோக்கி: "ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்" (#லூக்கா 5:4)
கெனேசரேத்துக் கடல், வேதாகமத்தில் மற்ற இடங்களில் கலிலேயா கடல் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதிக ஆழமில்லாத இவ்விடத்தில் இரவு நேரங்களில்தான் மீன் பிடிப்பது வழக்கம் மீன்பிடித் தொழில் செய்த சீமோனுக்கு அது நன்றாகவே தெரியும்.

இயேசு கிறிஸ்துவைக் குறித்து, இவன் தச்சன் அல்லவா? (மாற்கு 6:3) என ஜனங்கள் கூறினர்.

தச்சுத் தொழில் புரியும் குடும்பத்தில் வளர்ந்த இயேசுவானவர் பகலில் ஆழத்திலே போய் மீன் பிடிகக் கூறுகிறார்.

இது மீன்பிடித் தொழிலில் தெரிந்தவர்களுக்கு எதிர்மறை வார்த்தையாகவே இருந்திருக்கும். சரியெனவும், பெரிதாகவும் இவ்வுலகம் நினைக்கும் அனேக காரியங்கள் தேவனின் பார்வைக்கு ஒன்றுமில்லாதவைகள். அவரது சிந்தைகளை உலக ஜனங்கள் அறிந்து கொள்ள இயலாது.

ஆழமில்லா இடத்தில் இரவு நேரத்தில் பிடிக்க வேண்டிய மீன்களை பகலில் ஆழத்தில் பிடிக்கச் சொன்ன இயேசுவை, பேதுரு விசுவாசித்து, முற்றிலும் கீழ்ப்படிந்தான்!

தன் படகில் மட்டுமல்ல, மற்றொரு படகும் நிரம்பத்தக்கதாக, திரளான மீன்கள் அகப்பட்டன.
அன்புக்குரியவர்களே, இந்த செய்தியின் "கருப்பொருள்" ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய் மீன் படிக்கும்படி உங்கள் வலைகளை போடுங்கள் என்பதே ஆகும்!

மீன் பிடிப்பது அதிமுக்கியப் பணி! ஆம், அது ஆத்துமாக்கள் என்னும் மீன்களே! "இது முதல் நீ மனுஷரை பிடிக்கிறவனாயிருப்பாய்" (#லூக்கா 5:10) என்று இயேசுகிறிஸ்து சீமோனிடத்தில் கூறினார்.

இந்நாட்களில் சாதகமான சூழ்நிலை இல்லைதான்; விசக் கிருமிகளினால் இப்பிரபஞ்சத்தின் மனுக்குலமே ஊசலாடுவதும் உண்மைதான். சமயம் சார்ந்த கூடு கைகள் நடத்த தடை நிலவுவதும் நிஜமே;
ஆனாலும், ஆழத்திலே படகுகளை தள்ளிக்கொண்டு போகச் சொன்னவர் ஜீவனுள்ளவர்.

எனவே, நாம் பயப்படாமலும், கலங்காமலும் அவரது ஜீவ வார்த்தையின் படியே கவனத்துடன் பிரயாசமெடுப்பதே அவரின் எதிர்பார்ப்பு.

விசுவாசித்து கீழ்ப்படிந்த பேதுருவுக்கு வலைகள் கிழிந்து போக தக்கதான மீன்களை கொடுத்தவர், நமக்கும் ஆத்ம மீன்களை தர ஆயத்தமாய் இருக்கிறார். எனவே, அவருடைய வசனங்களுக்கு இணங்குவோம். ஆமென்!

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; (தீமோத்தேயு 4:2)