காங்கோவில் தட்டம்மை நோய்க்கு 132 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 24ந்தேதி வரை, 6,259 பேருக்கு இந்த தொற்று நோய் பரவியுள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறும்போது, நாட்டின் பொருளாதார தலைநகராக இருக்க கூடிய பாய்ண்ட்-நாய்ர் இந்த தொற்று நோய்க்கான மையம் ஆக உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்த பகுதியில் மொத்தம் 5,488 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 112 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இவர்களில் பெருமளவிலானோர் சிகிச்சை மையங்களுக்கு காலதாமதமுடன் வந்து சேர்ந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தட்டம்மையின் உத்தேச அறிகுறிகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார சேவையை வெகுசீக்கிரம் பயன்படுத்தி கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
அரசும், தொடர்ந்து பொது சுகாதார பணிகளை கண்காணித்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் தடுப்பூசிகளை போடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றால் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட இடையூறுகளை தொடர்ந்து தட்டம்மைக்கான தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. இதனை சுட்டி காட்டி கடந்த ஏப்ரலில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. தட்டம்மை நோய் தொற்று ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.



