டுவிட்டரின் பங்குதாரரான எலான் மஸ்க்கை வரவேற்ற சிஇஓ பராக் அகர்வால்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார்.
உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கியதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகள் இவர் வசமாகின.
இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பராக் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில் " எங்கள் நிறுவனத்தின் அங்கமாக எலான் மஸ்கை நியமிக்கிறோம். கடந்த சில வாரங்களாக அவரிடம் உரையாடியதில் இருந்து எங்கள் நிறுவனத்திற்கு அவர் மேலும் சிறந்த மதிப்பை சேர்ப்பார் என நம்புகிறேன் " என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "உங்களுடன் இணைந்து பணியாற்றுவதையும், வரும் மாதங்களில் டுவிட்டரை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் ஆர்வமாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.