கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...

#Health #Covid 19 #Treatment
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இதற்கான மருந்தை யாராவது கண்டுபிடித்துவிடமாட்டார்களா என்று உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் சற்றே நம்பிக்கை ஒளிக்கீற்றை காட்டியுள்ளது பிளாஸ்மா சிகிச்சை. பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்துவரும் கல்லீரல் மாற்று சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் இது குறித்து கேட்டோம்...

பிளாஸ்மா சிகிச்சை என்பது என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு எதிரணுக்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதிப்பில் இருப்பவருக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. ஏற்கெனவே மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்ட போதும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களின் ரத்தம் நடுநிலைப்படுத்தும் எதிர்ப்பணுக்களை கொண்டிருக்கும். இது ஒரு செயலற்ற ஆன்டிபாடி சிகிச்சையாக செயல்படும். இதுவே கொரோனாவுக்கான கன்வெலசென்ட் செரா (Convalescent Sera) என்று அழைக்கப்படுகிறது.

நோய் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலிலிருந்து ரத்தத்தை எப்படி சேகரிப்பது?

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலிலிருந்து புரதம் நிறைந்த ரத்தத்தை இரண்டு வழிகளில் சேகரிக்கலாம். அதில் ஒன்று, மைய விலக்கு நுட்பம் என்கிற Centri fuge technique. இம்முறையைப் பயன்படுத்தி வழக்கமான ரத்தத்தை திரும்ப பெறுதல் என்கிற வழியை உபயோகிக்கலாம். இதில் நாம் 180 மில்லி லிட்டர் முதல் 220 மில்லி லிட்டர் வரையிலான புரதம் நிறைந்த ரத்தத்தை சேகரிக்க முடியும். மேலும் அதை -60 டிகிரி செல்சியஸில் ஒரு வருடம் வரை சேமித்து வைத்திருக்க முடியும். இரண்டாவது, அப்ரிசஸ் எந்திரம்/செல் பிரிப்பான் எந்திரத்தை (Aphresis machine/ cell separator) பயன்படுத்தி நாம் ஒரு தடவையில் 600 மில்லி லிட்டர் ரத்தத்தை சேகரித்து, ஒரு வருடம் வரையிலும் சேமிக்க முடியும்.

கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

உலகளாவிய அளவில் தற்போது வரை இதற்கான எந்த துல்லியமான தகவலும் இல்லை. ஹெபடைட்டிஸ் பி வைரஸில் நமக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இதில் ஒரு முடிவு எடுக்கலாம். கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை வீதம், தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 3 அல்லது 5 நாட்களுக்கு, 180 முதல் 220 மில்லி லிட்டர் கன்வெலசென்ட் செராவை செலுத்தலாம்.

பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை பற்றியும் பேசுகிறார்களே...

பிளாஸ்மாவில் இருக்கும் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள அசாதாரணமான பொருட்களை அகற்றுவது சிகிச்சை பிளாஸ்மா பரிமாற்றம் (Therapeutic Plasma Exchange) என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டில் சிறந்த சிகிச்சை எது?

இரண்டுமே முக்கியம். கொரோனா பாதித்த நபருக்கு கன்வெலசென்ட் செராவை பயன்படுத்துவதுடன், பிளாஸ்மா பரிமாற்ற தொழில்நுட்பத்திலும் சிகிச்சை அளிப்பதால் சுவாச பிரச்னையை’ குறைத்து வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க முடியும்.பிளாஸ்மா சிகிச்சையில் இருக்கும் வேறு

நன்மைகள் என்ன?

இதற்கான செலவு மிகக் குறைவு, விரைந்து செய்யக்கூடியது, எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை, தடுப்பூசியைப் போலவே முறையாக பராமரித்து கன்வெலசென்ட் செராவை நாட்டில் உள்ள எந்த பகுதிக்கும், உலக அளவிலும் எளிதாக கொண்டு செல்லலாம்.

எப்போது நடைமுறைக்கு வரும்?

பிளாஸ்மா சிகிச்சையை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ஒரு சில நாடுகளில் இப்போதுதான் சோதனை அடிப்படையில் பரிசோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்த 3 வாரங்களுக்குப் பின்னர்தான் அவரிடமிருந்து ரத்தத்தை பெற முடியும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டியிருப்பதால் இது நடைமுறைப்படுத்த இன்னும் நாட்கள் தேவைப்படும். ஆனால், கூடியவிரைவில் நடைமுறைக்கு வந்து நமக்குப் பலன் கொடுக்கும் என்று நம்பலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4