ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட்

Prathees
4 years ago
 ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலன்ட் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

இன்று காலை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி,  இராஜாங்கச் செயலாளர் நுலன்ட்டிடம் விளக்கினார்.

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து இராஜாங்கச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் உள்ள பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்கச் செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற நிகழ்வுகளின் தாக்கத்தை தணிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றை இராஜாங்கச் செயலாளர் பாராட்டினார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்திக்கான சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ தூதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4