கிழக்கில் மக்களின் பாதுகாப்பிற்கு மன நோயாளிகளையா வைத்திருக்கின்றீர்கள்? சாணக்கியன்
கிழக்கு மாகாணத்தில் மக்களின் பாதுகாப்பிற்கென மனநோயாளிகளையா வைத்திருக்கின்றீர்கள் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த சார்ஜன்ட் அழகரட்ணம் நவீணனின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
சுட்டவரை மனநோயாளியாக சித்தரிப்பதன் ஊடாக எமது பிரதேசத்தில் மனநோயாளிகளை கடமைக்காக நியமித்துள்ளீர்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது என சந்தேகம் வெளியிட்டார்.
அரசுடன் இணைந்து எமது பகுதியில் செயற்படுபவர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பொலிஸாரினை வைத்திருப்பதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொலிஸார் தவறு செய்தால் தட்டி கேட்கும் தைரியம்
இவர்களிடம் இல்லை என கூறினார்.
பொலிஸாருடன் இணைந்து வியாபாரங்களை செய்பவர்கள் அவர்கள் விடுகின்ற தவறுகளை எவ்வாறு தட்டி கேட்க முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் நீதிக்காக போராடும் ஒரு கட்சியாகும். இந்த இளைஞர் விடயத்திலும் நீதிக்காக போராடுவோம்.அவருடன் இறந்த மூன்று சகோதரர்களுக்காகவும் குரல் கொடுப்போம் என அவர் கூறினார்.