அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்
நடந்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கினால் என்ன செய்வோம்? மழைக்கு மரத்தின் கீழ் கூட ஒதுங்குவோம்.
ஆனால், மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் நிற்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. அது பழமொழி, பின்பற்ற வேண்டாம் என்று நினைக்கலாம்.
ஆனால், மழை பெய்யும்போது, ஒரு குறிப்பிட்ட மரத்தின் கீழ் நின்றால், நரக வேதனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அந்த மரத்தின் கீழ் வந்தவுடனே, உங்கள் தோல் அரிப்பு தொடங்குகிறது. உடலில் எரிச்சல் தொடங்கும், சற்று நேரத்தில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல் உணர்வீர்கள்.
அப்போது காட்டுக்குள் நடைபயணம் மேற்கொள்வது நரக வேதனை என்று உங்களுக்குத் தோன்றும். அந்த அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றால்கூட அதற்கு உயிருடன் வீடு திரும்ப வேண்டுமல்லவா? இப்படி பயமுறுத்தும் மரத்தின் பெயர் Arbol de la muerte. ஸ்பானிஷ் மொழியில் இருக்கும் இந்த மரத்தின் பெயரை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால் என்ன பெயர் வரும் தெரியுமா? "மரணத்தின் மரம்" (tree of death).
இது கரீபியன் மற்றும் சில வெப்பமண்டல காலநிலைகளில் காணப்படும் மரம். இந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதர்களுக்கு விஷமாக மாறுகிறது. மரம் உண்மையில் விஷத்தை சுரக்கிறது. மரத்தில் இருந்து வெளிப்படும் சாற்றிலும் ஏராளமான நச்சுகள் உள்ளன. இந்த சாறு, நீரில் கரையக்கூடியது. அதாவது மழை பெய்யும்போது, இந்த விசித்திரமான மரத்தின் கீழ் நின்றால், நீருடன் சேர்ந்து விழும்போது, மனிதர்கள் மீது பட்டால், மரணம் நிச்சயம்...
மரண மரம் அல்லது மஞ்சினீல் மரம் (The death tree or Manchineel tree) மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, கின்னஸ் புத்தகத்தில் கூட உலகின் மிக ஆபத்தான மரமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மரத்தின் பட்டை, இலைகள் மற்றும் பழங்கள் என எல்லாவற்றிலிருந்தும் விஷச் சாறு வெளியேறுகிறது. இந்த மரத்தின் பழம் பார்ப்பதற்கு (Fruit of the Tree) கொய்யா அல்லது ஆப்பிள் போன்றே தோற்றமளிக்கிறது. இந்தப் பழம் ஒரு நல்ல மணத்தையும் கொண்டுள்ளது. வனத்தில் யாராவது வழி தவறிச் சென்றால், இந்த மரத்தின் நஞ்சைப் பற்றித் தெரியாமல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
பழத்தை கடித்தால், வாயில் எரியும் உணர்வு தொடங்கும். அடுத்து தொண்டையில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது, அது மிகவும் வேதனையளிக்கும் வலியாக இருக்கும். இந்த மரத்தை நெருங்கியவர்கள் அல்லது அதன் சாற்றையோ, பழத்தையோ தொட்டவர்களுக்குக்கூட விரைவில் மருத்துவ உதவி கொடுக்காவிட்டால், மரணமும் சம்பவிக்கலாம்.
இவ்வளவு கொடூரமான மரத்தை யாராவது பயன்படுத்துவார்களா என்ன? மாட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை. இந்த மரண மரம் மனிதர்களுக்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது கரீபியனில், கடலின் அலைகளால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.