ஹேக்கர்களை பிடித்தால் 74 கோடி ரூபாய் சன்மானம்
டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை (ரேன்சம்) கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படும்.
கடந்த மே மாதம் டார்க்சைடு குழுவினர் நடத்திய இணையத் தாக்குதலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள 5,500 மைல் (8,850 கிலோ மீட்டர்) நீளமுள்ள எரிபொருள் குழாய்களின் இயக்கம் முடக்கப்பட்டது.
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிக்குத் தேவையான 45 சதவீத எரிபொருள் தேவையை இந்தக் குழாய்தான் பூர்த்தி செய்கிறது.
டார்க்சைடு இணையதளத் தாக்குதலாளிகள் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் குறித்த அடையாளம் அல்லது இருப்பிடம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவித்தால் இந்த சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டார்க்சைடு இணையவழித் தாக்குதலாளிகள் குழுவின் ரேன்சம்வேர் தாக்குதலில் பங்கேற்பதற்காக சதித்திட்டம் தீட்டிய யாரையாவது கைது செய்ய உதவும் தகவல்களைத் தெரிவித்தால் அவர்களுக்கு கூடுதலாக 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 38 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் குழு நடத்திய இணையவழி தாக்குதலால் கோஸ்டல் பைப்லைன் எனும் எரிபொருள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பல நாட்கள் நிறுத்தப்பட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை உண்டானது.
தாங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உண்டான பின்பு இந்த நிறுவனம் தாக்குதல்களுக்கு ஹேக்கர்களுக்கு 44 லட்சம் அமெரிக்க டாலரை பிட்காயின் வடிவில் பிணைத் தொகையாக வழங்கியது. இதில் பெரும் தொகை மீண்டும் மீட்கப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்