அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உடல்நிலையில் முன்னேற்றம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவ மைய மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
75 வயதாகும் பில் கிளிண்டனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்படவில்லை என்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு கொரோனா அல்லாத தொற்றுநோய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் கிளிண்டனின் டாக்டர்கள் அல்பேஷ் அமின், லிசா பார்டாக் கூறும்போது, பில்கிளிண்டன், நெருக்கமான கண்காணிப்புக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. அவர் விரைவில் வீட்டுக்கு செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றனர்.
இதுகுறித்து பில் கிளிண்டனின் செய்தித்தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டரில் கூறும்போது, பில்கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.



