இங்கிலாந்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு...நடப்பது என்ன? (வீடியோ)

இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது. தற்போது, நாடு முழுவதும் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களில் பெட்ரோல், டீசல் விலை 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில், இங்கிலாந்தில் தட்டுப்பாடு என்று வரும் செய்திகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லை என்ற அறிவிப்பை காண முடிகிறது. இதனால் இருப்பு உள்ள பெட்ரோல் நிலையங்களின் அருகில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அரசு மறுத்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் பல எரிபொருள் டேங்கர்கள் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்றும், இதனாலேயே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ப்ரெக்ஸிட் மற்றும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒரு லட்சம் லாரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக கனரக வாகனங்கள் துறை கணக்கிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய 25,000 கனரக வாகன ஓட்டுநர்கள் நாடு திரும்பவில்லை.
40,000 பேர் கனரக வாகனங்கள் ஓட்டுநர் தேர்வை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக, லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று துறைசார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என்று இங்கிலாந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.



