வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிக பிரமாண்டமான PCR பரிசோதனை நிலையத்தின் பணிகள் நேற்றைய தினம் .ஆரம்பிக்கப்பட்டன.கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய பி.சி.ஆர் ஆய்வகம், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கையினை ஆரம்பித்தது
எமிரேட்ஸ் விமானத்தில் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 53 பேருக்கு முதல் தடவையாக PCR பரிசோதனை இந்த நிலையத்தில் நேற்று (25) மாலை 6:30 அளவில் நடத்தப்பட்டது.
PCR மாதிரி பெற்றுக்கொண்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க 18வது கட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் மிக பிரமாண்ட PCR நிலையம், கடந்த 23ம் திகதி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் திறந்து வைக்கப்பட்டது.
விமான நிலையம், விமான சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனமொன்று இணைந்து, 5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2 மருந்தளவுகளையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர், நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளுக்கு இங்கு PCR பரிசோதனை நடத்தப்படுகின்றது.
PCR மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூன்று மணித்தியாலங்களுக்குள் பெறுபேறுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



