ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இலங்கையர்கள்!

ஜேர்மனியிலிருந்து இலங்கை தமிழ் அகதிகள் பலர் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விசேட விமானம் ஒன்றின் மூலம் எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளார்கள்.
இந்த நிலையில் மூன்றாவது தடவையாக ஜேர்மனியிலிருந்து புறப்படும் நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள் என பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “எதிர்வரும் செப்டெம்பர் 27ம் திகதி, திங்கட்கிழமை – ஜேர்மனியின் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்னர் மூன்றாவது தடவையாக இலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் நாடுகடத்தப்படவிருக்கிறார்கள்.
அகதிகள் பலரை ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுதியாக நாடுகடத்தும் நடைமுறை ஜேர்மனியில் முதற்தடவையாக இவ்வாண்டு, மார்ச் மாதம் 30ம் (March 30) திகதியும் இரண்டாவது தடவையாக ஜூன் மாதம் 9ம் (June 9) திகதியும் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இலங்கையில் தற்போது நிலவுகின்ற ஆபத்துக்களை மேற்கோள்காட்டி இவ்வாறான நாடுகடத்தல்களை நிறுத்தும்படி (to stop these charter flights) பரிந்துரை செய்து தாயகத்தின் அரசியல்வாதிகளாலும், பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள், அலட்சியம் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.



