ஹொட்டல் அறையில் பிரித்தானிய பிரஜை மர்மமான முறையில் உயிரிழப்பு

ஹொட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய தோமஸ் ஜோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
அவர்கள் ஹிக்கடுவை பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்துள்ள நிலையில் கடந்த 22ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த தனது சாரதியுடன் அவர் அருகம்பைக்கு சென்றுள்ளார்.
அதன்போது, குறித்த பிரித்தானியப் பிரஜை ஒரு அறையிலும் அவருடைய சாரதி வேறொரு அறையிலும் தங்கியிருந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி இரவு வேறொரு விருந்தகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இந்நபர் மறுநாள் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் குறித்த நபரின் தொலைபேசி இணைப்பில் இல்லை என அவரது மனைவி, சாரதிக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்துஇ சாரதி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சட்டவைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார்.
பின்னர் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



