விபத்தை ஏற்படுத்தி வாய்க்காலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு அதன் சாரதி தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நண்பகல் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவர் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை முச்சக்கரவண்டியில் சென்றவர் மோதியுள்ளார்.
இதன்போது யுவதி வீதியில் வீழ்ந்து கிடக்க அதனை பொருட்படுத்தாத முச்சக்கரவண்டி சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது தப்பிச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியை பிடிப்பதற்கு வீதியில் பயணித்தவர்கள் துரத்திய போது வேகமாக சென்ற முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.
எனினும் முச்சக்கரவண்டியையும் விட்டுவிட்டு சாரதி தப்பிச் சென்றுவிட்டார். விபத்திற்குள்ளான யுவதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



