சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பெற்றோருக்கு அறிவுறுத்தல்

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் எந்தவித பயமும் இன்றி அக்கறையுடன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடக சந்திப்பு இன்று காணொளி நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.
இதில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மருத்துவத்துறை வல்லுநர்கள், நாட்டில் உள்ள விசேட வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தடுப்பூசி செலுத்தப்படுவதால், நண்பர்களின் கருத்துக்களை கேட்டு சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தாமல் இருப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் நாளை முதல் நாட்பட்ட நோய்நிலைமைகளை கொண்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.



