கனடாவை உலுக்கிய செவிலியர் கொலையில் முக்கிய திருப்பம்

கனடாவில் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். சம்பவத்தின் போது கருப்பு நிற கார் ஒன்று வெளியேறியதாகவும், அந்த கார் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூவர் கருப்பு நிற 2016 Volkswagen Jetta வாகனத்தில் இரவு 7.52 மணியளவில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் இருவர் அந்த வாகனத்தில் இருந்து வெளியேறி, செவிலியர் Lynda Cruz Marques வாகனம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் காருக்கு திரும்பிய இருவரும் அந்த இடத்தில் இருந்து மாயமாகியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே லண்டன் பொலிசார் கருதுகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 15ம் திகதி குறித்த Volkswagen Jetta கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த வாகனம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.



