யாழ் மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு: பிரதமர் அலுவலகம் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மாணவன் தான் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு - வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தற்கொலை எனும் ரீதியில் பொலிஸார் விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர்.
இச்சம்பவத்தில், குறித்த மாணவன் உயிரிழந்தமை தெரியவருவதற்கு முன்பதாக அதாவது இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பதாக, அவர் மரணமடைந்தமை தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து, குறித்த மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.



