பீகார் நடுத்தர மக்களின் வங்கி கணக்குகளில் புரளும் கோடிக்கணக்கான பணம்

பாட்னா நாட்டில் நடுத்தர குடும்பத்தினர் ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பீகாரில் மட்டும் அம் மாநில மக்களை வங்கிகள் கோடீஸ்வரர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
பீகார் மாநி மக்கள் கடந்த சில நாட்களாக ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் திளைத்து வருகின்றனர். இதற்கு காரணம் தங்களின் வங்கி கணக்கில் எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கில் வருவாய் வந்து சேர்வதே இதற்கு காரணம்.
கடந்த வாரத்தில் மாநிலத்தின் ககாரியா பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.1.16 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதனை கண்டு பிடித்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தர கோரினர். ஆனால் அந்த நபரோ பிரதமர் தருவதாக கூறிய தொகையின் ஒரு பகுதி தான் இது எனவும் அதனை திருப்பி தர முடியாது எனவும் தெரிவித்து உள்ளார்.
இரண்டாவது சம்பவமாக கதிஹார் மாவட்டத்தில் பள்ளி கல்வி பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது முசார்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷா வின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.. இது குறித்து அவர் முதலில் நம்ப மறுத்துள்ளார். தொடர்ந்து தனது ஆதார் அட்டையை எடுத்து கொண்டு வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை சரி பார்த்துள்ளார். அதில் 52 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி படுத்தினார்.

இதனை அடுத்து அவர் அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் இந்த தொகையில் சிலவற்றை எங்களுக்கு தாருங்கள், இதனால் எங்கள் வாழ்நாள் முழுவதும் சுமூகமாக செலவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ராம் பகதூர் ஷா வின் மகன் சுஜித்குமார் குப்தா கூறுகையில் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை பற்றி கவலைப்படுகிறோம். அதே நேரத்தில் நாங்கள் விவசாயிகளாகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
இது குறித்து போலீசார் கூறுகையில் விவசாயி ராம் பகதூர் ஷா வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள பணம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்துவர் என கூறினர்.



