மனைவி மற்றும் குழந்தைகளைக் காப்பாற்ற யானையின் முன் பாய்ந்த நபர்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று சிறிய குழந்தைகள் மற்றும் மனைவியைக் காப்பாற்ற யானையின் முன் பாய்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாந்தோட்டை நாகர்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை நகர்வெவ, குருலு உயனா கிராமத்தில் வசிக்கும் 35வயதான பி. ஜி. அனுர என்ற நபரே பலத்த காயங்களுடன் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது மனைவி தெரிவிக்கையில்,
இந்த இடங்களில் தினமும் யானைகள் வருகன்றன. சம்பவம்நடந்த அன்றும் நாங்கள் யானைகளை விரட்டிவிட்டு காலையில் சிறிது தூங்கினோம்.
அதிக நேரம் தூங்கவில்லை. காலை6.30 மணியளவில் வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டது. அந்த நேரத்தில் நானும் என் கணவரும் எங்கள் மூன்று குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தோம். நான் சத்தமாக கத்தினேன்.
கணவர்எழுந்து கதவைத் திறந்து பார்த்தபோது யானை சுவரைத் தள்ளிக் கொண்டு இருந்தது. நாங்கள் அனைவரும் வீட்டின் உள்ளே சிக்கிக்கொண்டோம். ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டுக்குள் இருந்து அலறினோம்.
சுவர் உடைந்து வீட்டின் உள்ளே எங்கள் பக்கமாக வீசப்பட்டபோது, கணவர் யானையின் பக்கம் குதித்து எங்களை ஓடச் சொன்னார்.
யானை கணவரைத் துரத்தியபோது, நான் என் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினேன்.
அதே நேரத்தில் யானை கணவரைத் தாக்கியதுடன் தூக்கி வீசியது. கணவர் தரையில் விழுந்தார். யானை திரும்பி வந்து வீட்டை உடைத்தது.
அப்போது அருகில் இருந்தவர்கள் வந்து கூச்சலிட்டு யானையை விரட்டினர் என்று தெரிவித்தார்.




