ஐ.எஸ்., தலைவர் படுகொலை:பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு!

ஆப்ரிக்காவின் சாஹல் பிராந்திய ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.
வடஆப்ரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் இருந்து, தெற்கு சூடான் வரையிலான சாஹல் பிராந்தியத்தில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இங்கு, அபு - அல் - வாலித் அல் - ஷராவி என்பவர் 2015ல் ஐ.எஸ்., அமைப்பை நிறுவி, பர்கினா பாசோ உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2017ல் நைகரில், அமெரிக்க ராணுவத்தினர் நான்கு பேர் உள்ளிட்ட எட்டு பேர் ஐ.எஸ்., அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அல் - ஷராவி தலைக்கு 40 கோடி ரூபாய் தருவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் 2020ல், அல் - ஷராவியின் உத்தரவுப்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் நைகர் நாட்டில் கொல்லப்பட்டனர். இதனால், பிரான்சும் ஷராவியின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட காத்திருந்தது. சமீப காலமாக அல் - ஷராவி வெளியில் தலைகாட்டாமல் இருந்ததால், அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில், பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் - ஷராவி கொல்லப்பட்டதாக, பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மேக்ரோன் அறிவித்து உள்ளார்.
''இது, பிரான்சுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,'' என, அவர் கூறியுள்ளார். ஷராவி எங்கு, எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவலை பிரான்ஸ் வெளியிடவில்லை. எனினும், இது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



