அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் காலிஸ்தான் இயக்கம்

அமெரிக்காவில், பாக்., ஆதரவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் வேகமாக வளர்ந்து வருவதாக, ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்து உள்ளது.
அமெரிக்காவில் செயல்படும், காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் குறித்து, ஹட்சன் மையம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்கக் கோரும் அமைப்புகள், அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன.
அதுபோல, காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களும்,அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு, பாக்., உதவி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள், இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்கின்றனர்.
காலிஸ்தான் தனி நாடு கோரி வன்முறையில் ஈடுபடுகின்றனர். இது குறித்து, இந்தியா பல முறை அமெரிக்காவிடம் புகார் தெரிவித்துள்ளது. ஆனால், துரதிர்ஷடவசமாக, அமெரிக்க அரசு பிரிவினைவாத அமைப்புகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
அமெரிக்க அரசு, பஞ்சாபில், வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக உள்ள, காலிஸ்தான் பிரிவினைவாதிகளையும், அவர்களின் பயங்கரவாத செயல்களையும் கட்டுப்படுத்த, முன்னுரிமை அளிக்க வேண்டும். தவறினால், 1980ல் காலிஸ்தான் நிகழ்த்தியது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது. அதனால், அமெரிக்க அரசு, காலிஸ்தான் அமைப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிடில், மிகப் பெரிய அளவிலான உயிரிழப்பை தடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



