ஆர்யாவுடன் முரட்டு கூட்டணி போடும் அரவிந்த்சாமி..

Prabha Praneetha
2 years ago
ஆர்யாவுடன் முரட்டு கூட்டணி போடும் அரவிந்த்சாமி..

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தளபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.

இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் மூலமாக கதாநாயகனாகவும் களமிறங்கினார்.

ரோஜா படம் மூலமாக மட்டுமே ஏராளமான பெண் ரசிகைகளை தன் வசம் ஈர்த்துக் கொண்டார் அரவிந்த்சாமி. அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அரவிந்த்சாமி வலம் வந்தார். இவரை விரும்பாத ரசிகைகளே இல்லை எனும் அளவிற்கு ஏராளமான பெண்கள் ரசிகைகள் இருந்தனர்.

தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த அரவிந்த்சாமி சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தனி ஒருவன், போகன் என அடுத்தடுத்து அவரது இரண்டாவது இன்னிங்சில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அரவிந்த்சாமி கைவசம் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் அரவிந்த்சாமி மலையாள சினிமாவில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒட்டு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அரவிந்த்சாமி நடிப்பதால் இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்க உள்ளதாகவும், தமிழில் இப்படத்திற்கு ரெண்டகம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அரவிந்த் சாமி இறுதியாக கடந்த 1996ஆம் ஆண்டு தேவராகம் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒட்டு படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்படத்தை பிரபல நடிகர் ஆர்யா தயாரிக்க உள்ளாராம். அதாவது நடிகர் ஆர்யா மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ள ஆகஸ்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.