மூன்று மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட கறுப்பு பூஞ்சை நோயாளிகள்

கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கறுப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
தற்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இறுதியில் பலவீனமடையும் போது மட்டுமே இந்த நோய் ஏற்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தொற்று அல்லாத நோய்கள் உள்ளவர்களுக்கு இது உருவாக வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.
இது தோல், மூக்கு, மூளை, நுரையீரல், கண்கள் அல்லது உடலின் வேறு எந்த மேற்பரப்பிலும் உருவாகலாம். இங்குள்ள முதன்மை கிருமி ஒரு பூஞ்சை. அது சூழலில் உள்ளது. நோயாளிகள் வந்து போகும் போது யாருக்கும் இந்த நோய் பரவாது எனவும் அவர் கூறினார்.



