யாழில் ஊரடங்கு வேளையில் பிள்ளையாரைச் சுற்றி பெளத்த மத வர்ணப்பூச்சு

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார்குளத்தைச் சுற்றி பெளத்தக் கொடிகளில் காணப்படும்
வர்ணங்களை ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற இக்குளத்தின் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு பெளத்தக் கொடிகளில் உள்ள
நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளத்தின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த குளம் தற்போது புனரமைக்கும் போது குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில்
கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந் நிலையில் யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில் அவர் பார்வையிட்டுச் சென்ற நிலையில் இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.



