இலங்கையில் தொடரும் அத்துமீறல்கள் - கவலையில் இணை அனுசரணை நாடுகள் ! - ஜெனிவா கூட்டத்தொடரில் தெரிவிப்பு

#SriLanka #UnitedKingdom #Canada
Nila
3 years ago
இலங்கையில் தொடரும் அத்துமீறல்கள் - கவலையில் இணை அனுசரணை நாடுகள் ! - ஜெனிவா கூட்டத்தொடரில் தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரங்களின் முன்னேற்றங்கள், பொறுப்புக்கூறல் விடயம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படுதல், சிவில் சமூக இடைவெளியில் அதிகரித்துள்ள நெருக்குவாரங்கள்
ஆகியவை தொடர்பில் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயத்தைக் கையாளும் இணை அனுசரணை நாடுகள் நேற்று கவலை
வெளியிட்டுள்ளன.

கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவி, மொண்ரிநீக்ரோ, இங்கிலாந்து ஆகிய ஆறு இணை அனுசரணை நாடுகளே ஜெனிவாவில் நேற்று இலங்கை விடயம் தொடர்பில் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளன.

இணை அனுசரணை நாடுகளின் சார்பில் ஜெனிவாவுக்கான இங்கிலாந்துத் தூதுவர் சைமன் மான்லி ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில்
இலங்கை விடயம் தொடர்பாக உரையாற்றினார்.

அவர் அங்கு கூறியவை வருமாறு:

ஒரு விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நல்லிணக்க
முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான வேலைகளை உறுதி
செய்வதற்கும் இலங்கை அறிவித்துள்ள உறுதிப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றோம்.

இந்த நிறுவனங்களின் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கை அரசை வேண்டுகின்றோம். சில முக்கியமான வழக்குகளில் பொறுப்புக்கூறலில் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் கூட பின்னடைவு அடைந்ததால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

குறிப்பாக 2008 - 2009ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் காணாமல்போனது தொடர்பான வழக்கின் சமீபத்திய நகர்வுகள் கவலை அளிக்கின்றன.

தற்போதைய மனித உரிமை நிலைவரங்கள், குறிப்பாக சிவில் சமூகக் குழுக்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மிரட்டல், பத்திரிக்கையாளர்களை மிரட்டுதல் மற்றும் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட குடிமக்களுக்கு எதிராக அதிக கட்டுப்பாட்டு வரம்புகள் விதிக்கப்படுகின்றமை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் செயல்படும் சூழலை வழங்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். பொலிஸ் காவலில் நடக்கும் இறப்புகள் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளுக்கான - 47 ஆவது அமர்வில் நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சீர்திருத்துவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு காட்டிய அணுகுமுறை வரவேற்கத்தக்கது. இருப்பினும்
இந்தச் சட்டம் பற்றிய நமது நீண்டகால கவலைகள் இன்னும் உள்ளன. இலங்கை அரசை அதன் சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்றியமைக்குமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் புனர்வாழ்வு செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான அவர்களின் நோக்கத்தை
மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசை நாங்கள் வேண்டுகின்றோம்.

இந்தச் சூழலில் மனித உரிமை வழக்கறிஞர் யஹஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜசீம் ஆகியோரைப் பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு நாங்கள் இலங்கைக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மற்றும் தீர்மானம் 46/1ஐ செயற்படுத்துவதில் அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றோம் - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!